அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து இந்தியாவிற்கு வரிகளை அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவை பகைத்துக் கொள்ள வேண்டாம் என்று அமெரிக்க முன்னாள் தூதர் நிக்கி ஹேலி, ஜனாதிபதி ட்ரம்ப்பை எச்சரித்துள்ளார்.
இந்தியாவிற்கு 50 சதவீத பரஸ்பர வரி விதித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், அண்மைக் காலமாக இந்தியாவின் எதிரி நாடுகளான பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளோடு நெருக்கமான உறவை வைத்துள்ளார்.
மேலும் ரஷ்யாவுடனான இந்தியாவின் வணிகத்தை கண்டித்த ட்ரம்ப், சீனா விடயத்தில் மௌனம் காக்கிறார்.
ட்ரம்பின் இந்த செயற்பாடுகளால் இந்தியா - அமெரிக்கா உறவில் ஏற்பட்டுள்ள விரிசல் குறித்து முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி கவலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“இந்தியா மதிப்புமிக்க சுதந்திரமான மற்றும் ஜனநாயகமான ஒரு நாடு. இந்தியாவின் எழுச்சி என்பது, கம்யூனிஸ்ட் கட்டுப்பாட்டில் உள்ள சீனாவை போன்று அல்லாமல், சுதந்திர உலகிற்கு நன்மையாக அமையும்.
உலக அளவில் ஒப்பிட்டால் சீனாவிற்கு நிகரான உற்பத்தி திறன் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவால்தான் சீனாவின் பெய்ஜிங்கின் விநியோகச் சங்கிலிகளை உடைக்க முடியும்.
அமெரிக்காவில் சீனாவின் உற்பத்தி சங்கிலிகளை உடைக்க இந்தியா அவசியம். ஆடை, மலிவான தொலைபேசிகள் மற்றும் சோலார் பேனல்கள் என இங்கு உற்பத்தி செய்யமுடியாத பொருட்களில் சீனாவிற்கு ஈடாக இந்தியாவின் உற்பத்தி திறன் உள்ளது.
எனவே ட்ரம்ப் இந்தியாவை எதிரியாக பாவித்து நடத்துவதை கைவிட்டு, இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவதை தீவிரப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.